"மிக்ஜம்" புயலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்..!! நடிகர் விஜய் ஆதங்கம்

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் வந்த வண்ணம் உள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் செய்து வருகின்றது. அரசுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், "மிக்ஜாம்" புயலால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக நடிகர் விஜய் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கைகோர்ப்போம்.. துயர்துடைப்போம்.." என்று அதில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com