ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்
Published on

மகாளய அமாவாசை

புரட்டாசி மாதம் பவுர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலான காலம் மகாளயபட்சம் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்களில் பித்ருக்கள் என்று கூறப்படும் முன்னோர்கள் வானுலகில் இருந்து மண்ணுலகை நெருங்கி வருவதாக நம்பப்படுகிறது. அவ்வாறு வரும்போது அவர்களை மகிழ்விக்கும் சடங்குகளை நாம் செய்தால் அவர்களின் ஆசியோடு நம் வாழ்வில் நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம்.

இதில் முக்கிய தினமாக மகாளய அமாவாசை எனப்படும் புரட்டாசி அமாவாசை கருதப்படுகிறது. இந்த நாள், மற்ற நாட்களோடு ஒப்பிடுகையில் பிதுர்கர்மா செய்ய மிகுந்த காலமாக புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல மாதங்களாக தர்ப்பணம் கொடுக்க முடியாமல் போனவர்கள் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், அது அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் கொடுத்ததற்கு ஈடானது ஆகும் என்று கூறப்படுகிறது.

தர்ப்பணம் கொடுத்தனர்

இந்த நிலையில் இந்த ஆண்டு மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் குவிந்தனர். திருச்சி மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து, காவிரி ஆற்றில் நீராடி முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய புரோகிதர்கள் உதவியுடன் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வந்ததால் அம்மா மண்டபம் பகுதியே கூட்ட நெரிசலாக காணப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் சாலையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வீரேஸ்வரம் கருட மண்டபம், மேலூர் அய்யனார் கோவில் பகுதிகளிலும் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இதையொட்டி மாநகராட்சி சார்பில் அம்மா மண்டபம் படித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்களும், ரப்பர் படகுகள், மீட்பு பணி உபகரணங்களுடன் லைப் ஜாக்கெட் அணிந்த மீட்பு படை வீரர்களும் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் தயார் நிலையில் இருந்தனர்.

இதற்கிடையே திருச்சி காவிரி ஆற்றுப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பாலம் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானவர்கள் காவிரி பாலம் வழியாக இருசக்கர வாகனங்களில் அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து சென்றனர். இதனால் காவிரி பாலத்தில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாலம் வழியாக செல்ல வந்த வாகன ஓட்டிகள் காத்திருந்து, மெதுவாக வாகனங்களை இயக்கினர். வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com