

அவிநாசி,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக, தமிழகத்தை ஆட்டிப்படைத்த தீயசக்தி திமுகவின் ஆட்சியை முடித்து கட்ட முடிவெடுத்துள்ள தமிழக மக்களின் மாற்றத்திற்கான ஒற்றை நம்பிக்கையாக ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் களம் இறங்கி உள்ள பாஜகவின் வெற்றி வேட்பாளர் மத்திய இணை மந்திரி டாக்டர் எல்.முருகனை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
அவிநாசி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, உள்ளூர் மக்களையும், மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனது மந்திரி பணிகளையும் தாண்டி மக்களோடு மக்களாக அண்ணன் எல்.முருகன் பயணித்து வருகிறார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மந்திரியாகவும், இணை மந்திரியாகவும் நாட்டிற்கு சேவை செய்த பெருமைக்குரியவர்.
தமிழக மக்களின் நலன்களை புறந்தள்ளி, ஊழல் செய்யவும், தமிழகத்தை சுரண்டி கொள்ளையடிக்கவும் மட்டுமே, 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுகவை தமிழக மக்கள் ஆட்சியில் இருந்து விரட்டியடிக்க முடிவெடுத்து வாக்களிக்க காத்திருக்கிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற உறுதியோடு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்த திமுகவை எதிர்த்து தமிழகத்தின் தாய்மார்களும், சகோதரிகளும் வாக்களிக்கப்போவது உறுதி.
எனவே, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜகவின் வெற்றி வேட்பாளர் டாக்டர் எல்.முருகனை அவிநாசி மக்கள் மகத்தான வெற்றி பெற வைக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! அவிநாசி தொகுதி வளரட்டும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.