பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதை நிறுத்தி விட்டு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் - அண்ணாமலை

புதிய பேருந்துகளை வாங்குவோம் என்று, ஆண்டுதோறும் வெற்று அறிவிப்புகளோடு தி.மு.க. அரசு நிறுத்திக் கொள்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் அருகே, பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதும், 38 பேர் படுகாயம் அடைந்துள்ள செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்த சகோதரி குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் நலம்பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

பேருந்து ஓட்டுநர், தூக்கக் கலக்கத்தில் கட்டுப்பாட்டினை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களில், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதும், அதன் காரணமாக, ஊழியர்கள் அதிக பணிச் சுமைக்கு ஆளாவதும் தொடர்கதை ஆகியிருக்கிறது. மேலும், முறையான பராமரிப்பின்றி, அரசுப் பேருந்துகள் தொடர்ந்து விபத்தில் சிக்குவதும், இதனால் பயணிகள் அல்லலுக்குள்ளாவதும் தினசரி செய்திகளாகியிருக்கின்றன.

காலி பணியிடங்களை நிரப்புவோம், புதிய பேருந்துகளை வாங்குவோம் என்று, ஆண்டுதோறும் வெற்று அறிவிப்புகளோடு நிறுத்திக் கொள்கிறது தி.மு.க. அரசு. உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களில், காலி பணியிடங்களை நிரப்பவும், பழுதடைந்த பேருந்துகளைப் பயன்படுத்தி, பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதை நிறுத்தி விட்டு, புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும் தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com