

ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். குறிப்பாக குளம், ஆறு போன்ற நீர்நிலைகளின் கரையோரத்தில் புரோகிதர்கள் முன்னிலையில் சாதம், எள் ஆகியவற்றை படைத்து முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களின் ஆசி கிடைக்கவும் வேண்டி வழிபடுவர்.
அந்தவகையில் பழனி பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகநதி, இடும்பன்குள கரையில் தை, ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். நேற்று ஆடி அமாவாசை என்பதால், பழனி சண்முகநதி கரையில் காலையிலேயே தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர். புரோகிர்கள் முன்னிலையில் தங்கள் முன்னோர் ஆசி கிடைக்க வேண்டி தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அதேபோல் பழனி பகுதியில் உள்ள மானூர் சுவாமி கோவில், கணக்கன்பட்டி சற்குரு கோவில் உள்பட சித்தர் பீடங்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
இதேபோல் நிலக்கோட்டை அணைப்பட்டி அருகே வீர ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வைகை ஆற்றுப்படுகையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நேற்று காலை முதல் ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் ஆற்றங்கரையில் தங்களது புரோகிதர் முன்னிலையில் தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் கோவிலில் தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.