

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 396 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற கலெக்டர் மோகன், இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உதவி தொகை
தொடர்ந்து, ஒரு மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் மற்றும் விக்கிரவாண்டி தாலுகா அய்யங்கோவில்பட்டை சேர்ந்த இளமதி என்ற திருநங்கைக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.