பெரம்பலூர்: கோவில் தேரை இழுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

பெரம்பலூர்: கோவில் தேரை இழுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
Published on

பெரம்பலூர்,

மின் கம்பியில் உரசியது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று திருவிழா நடை பெற இருந்தது. இதற்காக அந்த கோவிலில் உள்ள சுமார் 20 அடி உயரம் உள்ள சகடையை (சிறிய அளவிலான தேர்) அலங்காரம் செய்து சுவாமியை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கான பணியில் நன்னை தெற்கு தெருவை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான அண்ணாதுரை (வயது 42), விவசாயியான பரமசிவம் (42) ஆகியோர் நேற்று இரவு 8.45 மணியளவில் ஈடுபட்டு இருந்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் அந்த தேரை கோவிலில் இருந்து சாலை வழியாக இழுத்து சென்றனர். அந்த தேர் ஏரிக்கரை மேட்டில் சென்றபோது மேலே சென்ற மின்சார கம்பியை அவர்கள் 2 பேரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மின் கம்பியில் தேரின் உச்சியில் உள்ள கூம்பு பகுதி உரசியது.

போலீசார் விசாரணை

இதில், தேரை இழுத்து சென்ற அண்ணாதுரை, பரமசிவம் ஆகியோர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கோவில் நிர்வாகிகளுக்கும், குன்னம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன். சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ராம்தேவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் தேரை இழுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com