

சென்னை,
அரசு மருத்துவமனைகளில் நிரந்தரப் பணியிடங்கள் மட்டுமே வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல். இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2026 ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி மற்றும் மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..
அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறைக்கு தீர்வு-ஆட்குறைப்பு கைவிடல் பணி நிரந்தரம் - நிரந்தர நியமனங்களை வலியுறுத்தி..
அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு 7 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து 210 செவிலியர் பணியிடங்களை வேறு மருத்துவமனைகளுக்குப் பணி நிரவல் செய்யும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற பொதுச் சுகாதாரத் துறையிலிருந்தும், அரசு மருத்துவமனைகளிலிருந்தும் 292 பணியிடங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்யும் பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, புதிதாகத் தொடங்கப்படும் 6 செவிலியர் கல்லூரிகளிலும் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களையே பணியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்டு, சுமார் 6500 செவிலியர்கள் நிரந்தரப் பணியிடங்கள் இல்லாத காரணத்தால் தொகுப்பூதிய முறையிலேயே 9 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் அவர்களின் பணி நிரந்தரம் கேள்விக்குறியாகும். மேலும், இந்த நடவடிக்கை "5 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணி செய்யும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்ற தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக உள்ளது.
தமிழ்நாடு அரசு இந்த ஆட்குறைப்பு அரசாணை 204-ஐ ரத்து செய்து, தேவைக்கேற்ப புதிய நிரந்தரப் பணியிடங்களை தோற்றுவிப்பதுடன், அரசு மருத்துவமனைகளிலும், அரசு செவிலியர் கல்லூரிகளிலும் நிரந்தரப் பணியிடங்களில் மட்டுமே ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.