மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் மனு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்
Published on

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது. இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவின் வேட்புமனுக்களை ஏற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்பவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com