பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை: அதிர்ச்சியில் தாய் எடுத்த விபரீத முடிவு

துக்கம் தாங்காமல் பரிதவித்த அவரது தாயார், நேற்று மதியம் அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு சென்று கதறி அழுதுள்ளார்.
பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை: அதிர்ச்சியில் தாய் எடுத்த விபரீத முடிவு
Published on

குறிஞ்சிப்பாடி,

குள்ளஞ்சாவடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில தாயும் தூக்குப்போட்டு இறந்தார்.

பெட்ரோல் பங்க் ஊழியர்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் சந்தோஷ்குமார் (வயது 39). இவர் குள்ளஞ்சாவடியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கவிதா (34) என்ற மனைவியும், லோகேஸ்வரன் (7) என்ற மகனும் உள்ளனர். ஆதிமூலம் ஏற்கனவே இறந்து விட்டதால், அவரது மனைவி ராஜகுமாரி (65) தனது மகன் சந்தோஷ்குமாருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

தற்கொலை

இதனால் பதறிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது சந்தோஷ்குமார் அதே ஊரில் இருக்கும் முந்திரி தோப்பில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர், வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி கவிதா, குள்ளஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதே இடத்தில் தாயும் உயிரிழப்பு

இதற்கிடையே மகன் இறந்ததை அறிந்து துக்கம் தாங்காமல் பரிதவித்த ராஜகுமாரி நேற்று மதியம் சந்தோஷ்குமார் தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு சென்று கதறி அழுதுள்ளார். பின்னர் அவர், தனது மகன் தற்கொலை செய்து கொண்ட மரத்தின் அருகே உள்ள மற்றொரு மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து ராஜகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகன், தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com