பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்: காதலன் இறந்த 8-வது நாளில் காதலியும் சாவு

பலத்த தீ காயங்களுடன் இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்: காதலன் இறந்த 8-வது நாளில் காதலியும் சாவு
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(வயது 24). பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). இவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்தார்.

ஆகாசும், சிந்துஜாவும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணுடம் பழகியதால் சிந்துஜாவிடம் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 9-ம் தேதி பூம்புகார் கடற்கரை பகுதியில் ஆகாஷ், சிந்துஜா இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.

பின்னர் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை வந்துள்ளனர். மயிலாடுதுறை காவிரி பாலக்கரை என்ற இடத்தில் வந்தபோது ஆகாஷ் தன்னை தொடர்ந்து காதலிக்க மறுத்ததால் மனம் உடைந்த சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டுள்ளார்.

அந்த தீ இருவர் மீதும் பற்றி எரிந்துள்ளது. பலத்த தீ காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், சிந்துஜா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 14-ந் தேதி ஆகாஷ் உயிரிழந்தார். சிந்துஜாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் சிகிச்சை பெற்று வந்த காதலி சிந்துஜா மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து நேற்று சிந்துஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தன் மீதும், காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு காதலன் இறந்த நிலையில் காதலியும் இறந்து போன சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com