

சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஏற்றியும், குறைத்தும் விற்பனை செய்து வந்தன.
இந்த நிலையில், கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. இந்நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.79.43க்கும் மற்றும் டீசல் விலை ரூ.71.90க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை அதற்கு முந்தைய நாளின் விலையை விட 16 பைசாக்கள் குறைவாகும்.
இதேபோன்று சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து லிட்டர் ஒன்றிற்கு ரூ.79.33க்கும், டீசல் விலையானது 11 காசுகள் குறைந்து ரூ.71.79க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.