வரும் 14-ம் தேதி முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் - அன்புமணி அறிவிப்பு

வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14.12.2025 ஞாயிற்றுக் கிழமை முதல் 20.12.2025 சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான டிசம்பர் 20-ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






