

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 38) என்பவர் மீது நாசரேத் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பிரீத்தா நேற்று, ஜெயக்குமார் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதமும் மற்றும் கடத்தல் குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சாத்தான்குளம் உட்கோட்ட டி.எஸ்.பி. ஆவுடையப்பன் மற்றும் இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரேவதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.