

சென்னை,
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழுக்கு தனி இருக்கை அமைப்பதற்காக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி இருக்கை அமைய கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி உதவியாக வழங்கினார். இதற்கான காசோலையை ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்குழு உறுப்பினர் டாக்டர் ஆறுமுகம் முருகையாவிடம் அவர் கொடுத்தார்.
ஆண்டாள் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பின்னர் கவிஞர் வைரமுத்து பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், இயக்குனர்கள் பாண்டியராஜன், கவுதமன், கவிஞர் அறிவுமதி, பாடல் ஆசிரியர் முத்துலிங்கம், தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தகுதி
நிதி உதவி வழங்கிய பின்னர் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-
செம்மொழிக்கான தகுதிகள் என்று அறிவுலகம் வகுத்திருக்கிற அத்தனை தகுதிகளையும் கொண்ட பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. நெடுங்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் அது படைத்திருக்க வேண்டும். சில மொழிகளை ஈன்றெடுத்த தாய்த்தகுதி கொண்டிருக்க வேண்டும். உலக நாகரிகத்துக்குப் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். இடையறாத தொடர்ச்சியோடு இயங்கி வரவேண்டும். இவைகளெல்லாம் செம்மொழிக்கென்று குறிக்கப்பட்ட சில தகுதிகள்.
இவை அனைத்தும் கொண்ட தமிழ் செம்மொழியென்று எப்போது அறிவிக்கப்பட்டதோ, அப்போதே உலக பல்கலைக்கழகங்களின் இருக்கைகளில் அமரும் தகுதியை பெற்று விட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இருக்கையில் தமிழ் அமரும் காலம் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது.
பெருமை
ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழைமையானது. சில உலக தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உலக கவனத்திற்கு உள்ளாகின்றன. இத்தனை பெருமைமிக்க பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்து அமரப்போவது தமிழுக்கு பெருமைதானே என்று சிலர் கருதலாம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், 382 ஆண்டு கள் பழைமையான ஒரு பல் கலைக்கழகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்த பல்கலைக்கழகத்திற்குத்தான் பெருமை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்த இருக்கையில் நிகழவிருக்கும் ஆய்வுகள் தமிழ் மொழியின் அதிகாரம் மிக்க உண்மைகளை உலகுக்கு அறிவிக்கும் என்று நம்பலாம். இந்திய பண்பாட்டின் சரிபாதியை வகுத்துக் கொடுத்தது தமிழ். ஆனால், தமிழ் இன்னும் உலகத்தின் விளிம்பு வரைக்கும் சென்று விழவில்லை. அதற்கான அரசியல் காரணங்களையும் சமூக காரணங்களையும் நாம் அறிவோம். வடமொழி இலக்கியங்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய ஒரு மாக்ஸ் முல்லர் கிடைத்ததுபோல், அகிலத்திற்கு தமிழை அறிமுகம் செய்ய இந்த தமிழ் இருக்கை சில அறிஞர் பெருமக்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
அமெரிக்காவில் முடிசூடும் தமிழ்
சென்னை புத்தக காட்சியில் இந்த ஆண்டு விற்பனையாகும் என் நூல்களின் மொத்த தொகையை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு தருவதாக அறிவித்திருந்தேன். மொத்த விற்பனைத்தொகை 4 லட்சத்து 61 ஆயிரத்து 370 ரூபாய். அந்த தொகையை முழுமை செய்து 5 லட்சம் ரூபாயாக தமிழ் இருக்கைக்கு வழங்குகிறேன். தொகை சிறியதுதான். இது ஒரு நதியில் பெய்த 5 சொட்டு மழைதான். ஆனால் தமிழால் ஈட்டிய சிறு பொருள் தமிழுக்கு பயன்படுகிறதே என்று நெஞ்சு நிறைகிறது. பெருமனதோடு பெற்றுக்கொண்டு பெருமைப்படுத்த வேண்டுகிறேன்.
இந்த தமிழ் இருக்கையை முன்னெடுத்துச்சென்ற டாக்டர் ஜானகிராமன், திருஞானசம்பந்தன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் இருக்கைக்கு கொடை தந்த பெருமக்களெல்லாம் நன்றிக்குரியவர்கள். இதுவரை சில மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் தமிழுக்கு ஒரு பிரிவையே தொடங்கும் அதிகாரம் பெறுகிறது. மூவாயிரம் ஆண்டு கண்ட தமிழ் அமெரிக்காவில் முடிசூடுகிறது; மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.