

சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாலம் தடுக்க பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
சுதந்திர தினம்
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க புதுச்சேரியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி மாநில எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதேபோல் புதுச்சேரியில் மக்கள் அதிகமாக கூடும் பஸ், ரெயில் நிலையங்கள், கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு சோதனை
இந்தநிலையில் புதுச்சேரி கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சஜித் (உருளையன்பேட்டை), மனோஜ் (ஒதியஞ்சாலை) மற்றும் போலீசார் புதுவை புதிய பஸ்நிலையம், ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினார்கள்.இந்த சோதனை காரணமாக புதுச்சேரி பஸ், ரெயில் நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருமாம்பாக்கம்
கிருமாம்பாக்கத்தை அடுத்த முள்ளோடை நுழைவுவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பாகூர் சரக இன்ஸ்பெக்டர் வரதராஜன், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் போலீசார் கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர்.