அனுமதி இல்லாமல் 'டிரோன்' பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னையில் அனுமதி இல்லாமல் ‘டிரோன்’ பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதி இல்லாமல் 'டிரோன்' பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
Published on

எந்தெந்த இடங்களில் தடை?

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் தலைமை செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் குடியிருப்புகள், தூதரகங்கள், கலெக்டர் அலுவலகம், போலீஸ்துறை அலுவலகங்கள், மத்திய-மாநில முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டு தலங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள் போன்ற இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோவில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் போலீஸ்துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகே டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதி உள்ளது.

கடும் நடவடிக்கை

இந்த நிலையில் சமீப காலமாக ஒரு சிலர் தடை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அதை சுற்றி உள்ள இதர இடங்களிலும் உரிய அனுமதி இல்லாமல் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட்டு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றனர்.

எனவே இனிவரும் காலங்களில் உரிய அனுமதி இல்லாமலும், தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளிலும் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் உரிய போலீஸ்துறையின் அனுமதியுடன் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பயன்படுத்தி, போலீஸ்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com