வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் ஒரு வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 15 சவரன் நகை, ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 36), தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 9-ம் தேதி காலை 11 மணியளவில் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அப்போது தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றனர். அந்தச் சிறுவர்கள் பகலில் பள்ளிக்குச் சென்றுவிட்டு, இரவில் உறவினர் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளனர். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் இரவு பேச்சிமுத்து தம்பதியினர் ஊர் திரும்பினர். உறவினர் வீட்டிலிருந்த பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டின் பின்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது உறுதி செய்யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4.5 லட்சம் ஆகும்.

இதுகுறித்து பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்கள் ஏதேனும் சிக்கியுள்ளதா என மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com