

தூத்துக்குடி,
தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டோம்னிக் மகன் மரிய ஆக்னல் (வயது 36). இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒரு பிரபல சரித்திரப் பதிவேடு ரவுடியான இவர், திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன்விளை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார், ரவுடி ஆக்னலை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, ஆக்னல் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபுவை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் அவர் காயமடைந்தார். இதனையடுத்து தற்காப்புக்காகவும் குற்றவாளியைப் பிடிக்கவும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தனது துப்பாக்கியால் ரவுடி ஆக்னலை சுட்டுப் பிடித்தார்.
இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் ரவுடி ஆக்னல் ஆகிய 2 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.