கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயற்சி: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் கோமதி புகார் கொடுக்க சென்றார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோமதி (வயது 28). இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் கோமதி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவருடைய கணவர் அடிக்கடி அங்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் கோமதி புகார் கொடுக்க சென்றார். அப்போது அங்கு பணியாற்றிய ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். அங்கு தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் (54) என்பவரை தொடர்பு கொண்டால், அவர் உதவி செய்வார் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி, கோமதி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமை அணுகி உள்ளார். இதில் அவர்கள் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து ராஜாராம் கள்ளக்காதலியை தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி காமராஜ் நகரில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். அங்கு அடிக்கடி ராஜாராம் சென்றும் வந்துள்ளார். 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் ராஜாராம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் ராஜாராம் கோமதியை சந்திப்பதை கடந்த சில மாதங்களாக தவிர்த்து வந்துள்ளார். இது பற்றி கோமதி ராஜாராமிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் ராஜாராம், கோமதியை தொடர்பு கொண்டு நமக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் அதற்கு தீர்வு காண ஜோதிடம் பார்க்கலாம் என கூறி கோமதியின் ஜாதகத்தை சில நாட்களுக்கு முன்பு அவரிடம் இருந்து பெற்றுள்ளார். அதை தொடர்ந்து ஜாதகத்தில் பிரச்சினை இருப்பதால், இரவு நேரத்தில் கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து சாமி பாதத்தில் ஊற்றி பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து தடங்கம் அருகே பெருமாள்கோவில் மேட்டிற்கு வரும்படி கோமதியிடம் கூறியுள்ளார். கோமதி பெருமாள்கோவில் மேட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். ராஜாராம் பரிகார பூஜை செய்ய அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வரும்படி கோமதியிடம் கூறியுள்ளார்.
கோமதி குடத்தில் கயிறு கட்டி கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருந்த போது அவரை ராஜாராம் கிணற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது. அப்போது கிணற்றில் தத்தளித்த கோமதி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் கோமதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த சம்பவம் குறித்து விவரங்கள் தெரியவந்தது. தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் கிணற்றுக்குள் தள்ளி தன்னை கொலை செய்ய முயன்றதாக கோமதி கொடுத்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமை போலீசார் கைது செய்தனர்.






