எல்.கே.சுதீஷ் - நயினார் நாகேந்திரன் சந்திப்பு; கவர்னர் தேநீர் விருந்தில் கூட்டணி பேச்சு?

தேமுதிக கட்சியும், புதிய தமிழகம் கட்சியும் இதுவரை கூட்டணி குறித்து அறிவிக்க வில்லை.
எல்.கே.சுதீஷ் - நயினார் நாகேந்திரன் சந்திப்பு; கவர்னர் தேநீர் விருந்தில் கூட்டணி பேச்சு?
Published on

சென்னை.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற. சட்டமன்ற உறுப்பினர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.

அந்த வகையில், 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று தேநீர் விருந்து நடைபெற்றது. கவர்னரின் தேநீர் விருந்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, சென்னை காவல் ஆணையாளர் அருண், ஐகோர்ட்டு நீதிபதிகள், முன்னாள் கவர்னர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பல அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பல கட்சிகள் தங்களது கூட்டணி குறித்து அறிவித்து வருகின்றன. ஆனால் தேமுதிக கட்சியும், புதிய தமிழகம் கட்சியும் இது வரை தங்களது கூட்டணி குறித்து எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், கவனர்னர் தேநீர் விருந்தில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் சுமார் 10 நிமிடங்கள் பேசியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடனும் அதிமுக - பாஜக நிர்வாகிகள் பேசினர். இதனால் கூட்டணி குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com