

சென்னை,
பொங்கல் திருநாளில் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலக மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை போற்றிடும் திருநாளாகவும், விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட பொங்கல் பரிசு தொகுப்பை அரசு வழங்கி சிறப்பித்துள்ளது.
2-ம் பசுமை புரட்சி
உழன்றும் உழவே தலை என்று திருவள்ளுவர் விவசாயத்தின் சிறப்பை கூறுகிறார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும் வகையில், தமிழகத்தில் 2-ம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திட, ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு, விவசாயிகளுக்கு மானிய விலையில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் வழங்குதல், முதல்- அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், மண் ஆய்வின்படி உரமிட்டு உற்பத்தியை பெருக்கிட விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்குதல்,
தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை வாயிலாக விவசாயிகளுக்கு தரமான சான்றுபெற்ற விதைகள் வழங்குதல், விவசாயத்திற்கு அடித்தளமான நீர்வள ஆதாரங்களை தூர்வாரி மேம்படுத்திடும் வகையில் குடிமராமத்து திட்டம், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி,
சீரோடும், சிறப்போடும்...
வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைத்திடும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.5,318.73 கோடி கடன்களை தள்ளுபடி செய்தது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்தது, பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் ரூ.2,980 கோடி இழப்பீட்டு தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுத்தது போன்ற எண்ணற்ற திட்டங்களை விவசாயப் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும், பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.