

சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் காவிரி உரிமை மீட்பு பயணம் இன்று நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. செயல் தலைவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
நாளை (இன்று) தொடங்கவிருக்கும் காவிரி உரிமை மீட்புப்பயணத்தில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி வழிநெடுக இருக்கின்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடத்தில் அஞ்சல் அட்டைகளில் கையெழுத்து பெற்று ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனுக்கு அனுப்பி நம் கோரிக்கையை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில், திருச்சியிலிருந்து சென்னை கவர்னர் மாளிகை நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் தோழமைக் கட்சித் தலைவர்களோடு தொடங்கவிருக்கிறேன். நடப்போம், குரல் கொடுப்போம், மீட்டெடுப்போம்! என்று கூறியுள்ளார்.
அந்த அஞ்சல் அட்டையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு தொடர்ந்து நடத்தி வரும் மாபெரும் போராட்டத்தின் தன்மையை தாங்கள் நன்கு அறிவீர்கள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம், மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதுகாக்கப்பட-தமிழகத்தின் நதி நீர் உரிமை மீட்கப்பட, தாங்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து ஆவன செய்யுமாறு 7 கோடி தமிழ் மக்களின் இதய குரலாய் தங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். தாங்கள் நீதியை நிலைநாட்டி நியாயம் வழங்குவீர்கள் என்பது எங்கள் உறுதியான-இறுதி நம்பிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அஞ்சல் அட்டைகளை பொதுமக்களிடம் வழங்கி, ஒவ்வொருவரிடமும் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.