இயற்கை இடர்பாடுகளால் மின்தடங்கல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு


இயற்கை இடர்பாடுகளால் மின்தடங்கல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு
x

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் கடையநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தென்காசி

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் கடையநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (17.6.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடையநல்லூர் கோட்டம் செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை பொறியாளர் பேசியபோது, தென்மேற்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளான திடீர் சூறைக்காற்று, இடி, மின்னல், பெரும் மழையால், மின் விநியோகம் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்குவதற்கும், மின் பாதைகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மரக்கிளைகளால் மின் தடங்கல் ஏற்படும் என தெரிய வந்தால் பாதுகாப்பு கருதி மின் விநியோகத்தை நிறுத்தி உடனடியாக மரக்கிளைகளை அப்புறப்படுத்துவதற்கும், அந்த பகுதியில் உள்ள மின் பாதைகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்யவும், விவசாய மின் இணைப்புகளை தொடர் ஆய்வு மேற்கொண்டு மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மின் துண்டிப்பு செய்து காவல்துறை உதவியுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்கவும், அனைத்து மின் இணைப்புகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வாரிய விதி முறைகளுக்கு முரணாக இருந்தால் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருவாய் இழப்பீட்டை தடுப்பதற்கும், கடையநல்லூர் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்கவும், வருங்கால மின் நுகர்வை கருத்தில் கொண்டு புதிய மின் மாற்றிகள் அமைப்பதற்கும் உத்தரவிட்டார்.

பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தமிழ்நாடு மின் மின் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், (TNPDCL OFFICIAL APP) திருநெல்வேலி மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 ஆகியவற்றை தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story