

சென்னை,
நிவர் புயல் வரும் 25-ஆம் தேதி தீவிரப்புயலாக மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின் துறை தயாராக உள்ளது. தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன, வருகின்ற 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும்போது மக்களின் பாதுகாப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும். அதன் பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். அதை யாரும் மின்வெட்டு என்று நினைக்க வேண்டாம். தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகளவு மழை பெய்யக் கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அதை சீரமைக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன, 100 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசினாலும், எந்த இடங்களில் புயல் கரையை கடந்தாலும் மின் துறை சமாளிக்க தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.