

சென்னை,
தவெகவில் சேரச்சொல்லி தன்னை போலீசார் நிர்பந்திப்பதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அவர் பேசும்போது தமிழக முதல்-அமைச்சர் சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார். அவரை கொண்டு வந்து சட்டசபையில் உட்கார வைத்த உடன் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் என்று அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக த.வெ.க. கட்சி நிர்வாகிகள் ஆத்தூர் போலீ சில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது பி.என்.எஸ். 352 மற்றும் 353/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, எஸ்.பி. அலுவலகத்தில் அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 5 மணி நேர விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தற்போது அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். செல்லும் வழியில் அவரிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முற்பட்டனர். அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது;
”எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி போலீசார் நெருக்கடி தருகிறார்கள். தவெகவில் சேரச்சொல்லி என்னை போலீசார் நிர்பந்திக்கிறார்கள். நான் ஒத்துக்கொள்ளவில்லை. நான் ராஜினாமா செய்ய மாட்டேன். திமுகவில் உறுதியாக இருப்பேன். விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்ப்போம். காவல்துறை அராஜகம் செய்கிறது. ”
இவ்வாறு அவர் கூறினார்.