

சென்னை,
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதை 25 நாட்கள் என்று மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது.
இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களும் இன்று ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதால், உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், இன்றுடன் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
பல டீலர்களும் நேற்று முதலே உணவகங்களுக்கான விநியோகத்தை நிறுத்திவிட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கையிருப்பிலுள்ள சிலிண்டர்கள் விவரம் குறித்து இன்று பிற்பகலுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், போர்ச் சூழலால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய வீட்டு உபயோகமற்ற துறைகளுக்கு கியாஸ் சிலிண்டர்கள் கிடைக்கும்படி முன்னுரிமை அளிக்க இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவை, நிறுவனங்களின் நிர்வாக குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தகுதி, தேவை மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.