

வில்லியனூர்
மாமுல் கேட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனியார் பஸ் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாமுல் கேட்டு தாக்குதல்
புதுச்சேரி ஊசுட்டேரி படகு குழாம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் திருக்கனூர் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு தனியார் பஸ் வந்தது. அப்போது 3 பேர் கஞ்சா போதையில் அந்த பஸ்சை மறித்து ஏறினர். அவர்களிடம் பஸ் கண்டக்டர் வினோத் என்பவர் டிக்கெட் கேட்டபோது 3 பேரும் அருகிலுள்ள ஊசுட்டேரி பகுதியில் இறங்கி கொள்வதாக கூறி ஓசியில் பயணம் செய்துள்ளனர்.
இந்தநிலையில் ஊசுட்டேரி நிறுத்தம் வந்ததும் அவர்களை பஸ்சில் இருந்து இறங்குமாறு கண்டக்டர் கூறியபோது இறங்க மறுத்து 3 பேரும் கண்டக்டரிடம் மாமுல் கேட்டதாக தெரிகிறது.
தர மறுத்ததால் கண்டக்டரின் கையில் இருந்த பண பையை பிடுங்கியதுடன் கண்டக்டர் வினோத்தை தாக்கியுள்ளனர். பின்னர் போன் செய்து அழைத்ததன்பேரில் அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5-க்கும் மேற்பட்டோர் வினோத், பஸ் டிரைவர் கோகுல் ஆகியோரை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து அங்கிருந்த பயணிகள் சமாதானம் செய்தனர். அதன்பிறகு அந்த கும்பல் பஸ்சில் இருந்து இறங்கி சென்றுவிட்டது.
திடீர் சாலை மறியல்
இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் அளிக்க கண்டக்டர் வினோத் சென்றபோது அதிகாரிகள் ஆய்வுக்காக வர உள்ளதால் சிறிது நேரம் காத்திருக்கவும் என்று அங்கிருந்தவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் வினோத் பின்னர் புகார் செய்யலாம் என கருதி அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் இன்று காலை 8 மணியளவில் பத்துக்கண்ணு சந்திப்பில் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக பஸ்களை நிறுத்தி தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மாமுல் கேட்டு பஸ் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடும் வாக்குவாதம்
காலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளை பத்துக்கண்ணு பகுதியில் இறக்கிவிடப்பட்டதால் அவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாச்சலம், ஏட்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அவர்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கண்டக்டர் வினோத் வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.