ஆடல், பாடலுடன் படுகர் இன மக்கள் ஊர்வலம்

ஜெகதளாவில் ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி ஆடல், பாடலுடன் படுகர் இன மக்கள் ஊர்வலம் சென்றனர்.
ஆடல், பாடலுடன் படுகர் இன மக்கள் ஊர்வலம்
Published on

குன்னூர், 

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று குன்னூர் அருகே ஜெகதளாவை தலைமையிடமாக கொண்ட ஆரூர் கிராம மக்கள் ஹத்தையம்மன் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகாரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமத்தினர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

கடந்த 6-ந் தேதி காரக்காரை மடிமனையில் குண்டம் திருவிழா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மடிமனையில் இருந்து மடியோரை சென்று விட்டு, மீண்டும் ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலை அடைந்தனர். நேற்று ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து மடியோரை சென்று அம்மனை அலங்கரித்தனர். பின்னர் ஆடல் பாடலுடன் பக்தர்கள் அம்மனை ஊர்வலமாக அழைத்து சென்றனர். படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து இசைக்கருவிகள் முழங்க ஹெத்தையம்மன் கோவிலுக்கு வந்து, காணிக்கை செலுத்தி வழிபட்டனர். இதேபோல் காட்டேரி உள்ளிட்ட கிராமங்களிலும் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற்றது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com