‘கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை’ - அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாடு மிகப்பழமையான கடல்சார் வரலாற்றை கொண்டது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற நீலப் பொருளாதார மாநாடு-2025ஐ (Blue Economy Submit 2025), தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-
“நீலப் பொருளாதார மாநாடு என்று சொல்வதைவிட, இதனை நீலப் பொருளாதார கருத்தரங்கம் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த மாநாட்டில் பங்குப்பெறும் அனைத்து வல்லுநர்களும் அனுபவமிக்க கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் கடற்கரை பிற மாநில கடற்கரைகள் போல் அல்லாமல், வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளைக் கொண்ட ஒரு தீபகற்ப கடற்கரை பகுதியாகும். பன்னாட்டுக் கப்பல்கள் செல்லும் வழித்தடத்திற்கு மிக அருகாமையில் கடற்கரை கொண்ட பகுதியாகும்.
மேலும், தெற்கே நெருங்கிய உறவுகள் கொண்ட அண்டை நாடாக இலங்கை உள்ளது. 14 கடலோர மாவட்டங்கள் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியைப் பயன்படுத்துவோர் பல்வேறு தரப்பினர். குறிப்பாக தங்கள் வாழ்வாதாரத்திற்கு கடற்கரை பகுதியிலேயே குடியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்கள், மீன்பிடி துறைமுகங்கள், மீன்வளர்ப்புப் பண்ணைகள், வணிக ரீதியாக மத்திய மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகங்கள், மக்கள் பொழுதுபோக்கு கடற்கரை பகுதிகள் (Beaches) சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளான அலையாத்தி காடுகள், ஆமைகள் முட்டையிடும் பகுதிகள், மன்னார் வளைகுடா பவளப் பாறைகள் நிறைந்த பகுதிகள், பறவைகள் சரணாலயங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் (திருச்செந்துார், ராமேஸ்வரம்), தேவாலயங்கள் (வேளாங்கண்ணி, மணப்பாடு), இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் (நாகூர்), கடலோர தொழில் பூங்காக்கள் மற்றும் கலங்கரை விளக்கங்கள்.
தமிழ்நாடு மிகப்பழமையான கடல்சார் வரலாற்றை கொண்டது. பண்டைய தமிழ் மன்னர்கள் கடல்கடந்து வாணிபம் செய்ததோடு, சக்திவாய்ந்த கப்பல்படைகொண்டு, தெற்காசிய நாடுகள் சுமத்ரா, ஜாவா வரை கைப்பற்றி தங்கள் சாம்ராஜ்யத்தை நிலைநாட்டியுள்ளனர். கப்பல் கட்டுதலில் மிகச்சிறந்த தொழில்நுட்பங்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் இருந்தததற்கான சான்றுகள் உள்ளன. பண்டைய தமிழ்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து தென்கிழக்கு ஆசியா, இலங்கை, ரோம், கிரேக்க நாடுகளுடன் வாணிபம் நடைபெற்று வந்துள்ளது.
உலகளவில், சுமார் 80% சதவீத வணிகமும், மிகநீண்ட சுமார் 11,000 கிலோ மீட்டர் நீள கடற்கரைப் பகுதியைக் கொண்ட நம் நாட்டில் சுமார் 95% சதவீத வணிகம் கடல்வழியாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கும் நமக்கு இந்த நீலப் பொருளாதாரம் அதாவது கடல்வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது நம் தலையாயக் கடமை.
அதற்கு வணிகத்துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், கடல்சார் சுற்றுலா மேம்பாடு, கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல், ஆகிய துறைகளில் நாம் மேலும் முன்னேற்றமடைய திட்டங்களை வகுக்கவேண்டும். 2024-25ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த GDP சுமார் 6-7 சதவீதம் இருக்கும்போது, தமிழ்நாட்டின் GDP இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இரட்டை இலக்கத்தில் அதாவது 11.2% சதவீதம் வளர்ச்சியினை எட்டியுள்ளது.
இதற்கான முக்கிய காரணங்கள் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடுகள், மனிதவள திறன் மேம்பாடு, அதிக வாகன உற்பத்தி நிறுவனங்கள் (இந்தியாவின் டெட்ராய்ட்- மோட்டார் நகரம்), ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் எளிதில் தொழில் துவங்க உகந்த மாநிலமாக உள்ளது ஆகியவனவாகும்.
கடல்மார்க்கமாக கப்பல்கள் மூலம் கொண்டு செல்லும் சரக்கு வணிகத்தில், சாலை மற்றும் ரெயில் மூலமாக கொண்டு செல்லும் கட்டணத்தைவிட மிகக் குறைவானதாகும். மேலும், சுற்றுப்புறச் சூழல் மாசின்றி சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இயலும். மேலும், சென்னை – கன்னியாகுமரி சாலையும், கிழக்கு கடற்கரை சாலையும் நம் கடலோர வணிக துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களுக்கு எளிதான சாலை இணைப்பினை வழங்குகிறது. மேலும் தமிழ்நாட்டில் கடற்கரை பகுதிகளுக்கு ரெயில் இணைப்பும் போதிய அளவில் உள்ளது. இந்த துறைமுக மேம்பாட்டாளர்கள் கருத்தில் கொண்டு துறைமுகங்களை அமைக்கவும், தொழில் துவங்கவும் முன்வர வேண்டும்.
இத்தகையப் பெருமை வாய்ந்த தமிழ்நாட்டில், நீலப் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்க இத்துறை சார்ந்த வல்லுநர்கள், அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கருத்து பரிமாற்றம் ஆக்கப்பூர்வமாக அமைய வாழ்த்துகள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






