சொத்து வரி உயர்வு: தமிழகம் முழுவதும் ஏப்.10 முதல் தெருமுனை கண்டனக் கூட்டம் - அமமுக அறிவிப்பு

சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தெருமுனை கண்டனக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
சொத்து வரி உயர்வு: தமிழகம் முழுவதும் ஏப்.10 முதல் தெருமுனை கண்டனக் கூட்டம் - அமமுக அறிவிப்பு
Published on

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா பாதிப்புக்குப் பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்படத்தொடங்கி இருக்கும் நிலையில், தமிழக மக்களை வாட்டி வதைக்கும் அறிவிப்புகளை திமுக அரசு வெளியிட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக வீடுகளுக்கான சொத்து வரியை 100% வரையிலும், வணிக இடங்களுக்கான சொத்துவரியை 150% வரையிலும் கொஞ்சமும் மனசாட்சியின்றி உயர்த்தியிருக்கிறார்கள்.

இதனைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அமமுகவின் சார்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தெருமுனை கண்டனக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. ஏப்ரல் 10-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள இக்கூட்டங்களில், விடியல் ஆட்சி தரப்போவதாக கூறி பதவிக்கு வந்த திமுகவின் உண்மை முகத்தை தமிழக மக்களிடம் தோலுரித்து காட்டுவோம்.

இந்தக் கூட்டங்களை அந்தந்த பகுதிகளில் ஒருங்கிணைத்து நடத்திடுமாறு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் அனைத்து நிலையிலுள்ள கழக நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com