

திருநெல்வேலி,
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட கோரி நெல்லையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில், நெல்லை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திட்டத் தலைவர் நாகையன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். 5 ஆண்டு ஒப்பந்தம் மூலம் ஒப்பந்தப் பணியாளர் நியமனம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும் கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி வழங்குவது, ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்வது, கணக்கீட்டுப் பிரிவில் பணிபுரியும் R.S. மற்றும் IA பணியாளர்களை கீழ்நிலை பணிகளைச் செய்ய நிர்பந்திக்கக் கூடாது, நெல்லை மின் திட்டத்தில் பணிபுரியும் களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகளை உடனடியாக வழங்குவது போன்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திட்ட துணை தலைவர் பூலுடையார், திட்ட துணைச் செயலாளர் தளபதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுவாமிதாசன் மற்றும் கோமதி, கோட்டச் செயலாளர்கள் முருகேசன், வேல்முருகன், அய்யாத்துரை, ஜார்ஜ், திட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன், காற்றாலை பிரிவு துணைச் செயலாளர் அந்தோனி கிளமென்ட் உள்ளிட்டோர் பேசினர். திட்டச் செயலாளர் கந்தசாமி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். மத்திய அலுவலகத் தலைவர் அழகர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான மின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.