யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை

கூடலூர் நாடு காணி, ஓவேலி, நடுவட்டம் ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளன.
யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்.. குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை
Published on

நீலகிரி,

குறிஞ்சி மலர், தமிழர்களின் பண்பாட்டோடும், இயற்கை வளத்தோடும் நெருங்கிய தொடர்புடைய மலராகும். இது நீல நிறத்தில் பூக்கும். சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் என்ற பெயருக்கு இந்த மலரே காரணமாக விளங்குகிறது. குறிஞ்சி மலரின் அறிவியல் பெயர் 'ஸ்டிராபிலாந்தஸ் குந்தியானா' ஆகும்.

நீலகிரி மாவட்டம்

வழக்கமாக நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிஞ்சி செடிகள் வளருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதால், சிறப்பு வாய்ந்த மலராக மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடு காணி, ஓவேலி, நடுவட்டம் ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளன.

சுற்றுலா பயணிகள்

மலைகள் முழுவதும் நீல நிற போர்வை போர்த்தியது போல் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கி காட்சியளிக்கிறது. இதனால் கூடலூர் சுற்றுவட்டார மக்கள் குறிஞ்சி மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதேபோல் கேரளம், கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகளும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள தகவல் அறிந்து, அதிக அளவு வர தொடங்கியுள்ளனர்.

யானைகள் நடமாட்டம்

இந்நிலையில் கூடலூர் ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள குறிஞ்சி பூக்களைப் பார்வையிட, பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி ஓவேலியின் கடைக்கோடி வனப் பகுதி, விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள மலைத் தொடரில் இந்தப் பூக்கள் பூத்துள்ளதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், தொடர் கண்காணிப்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com