

சென்னை,
என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் விளையாட்டு பிரிவில் 3 ஆயிரத்து 210 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 500 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 1,176 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 258 பேரும், விளையாட்டுப் பிரிவில் 416 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 139 பேரும் என மொத்தம் 813 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.
இதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலம் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. மொத்தம் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடக்க இருக்கும் நிலையில், முதல் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பொது தரவரிசையில் 1 முதல் 37,976 வரையிலான இடங்களில் உள்ள மாணவ-மாணவிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
2-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரையில் நடக்கிறது. அதில் பொது தரவரிசையில் இடம்பெற்ற 37,977 முதல் 1,31,093 வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள். 3-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்கி 31-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதில் பொது தரவரிசையில் 1,31,094 முதல் 2,33,812 வரையில் இடம்பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடக்கிறது. அந்த கலந்தாய்வும் இன்று தொடங்கி அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் பட்சத்தில் அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.