கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டா வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டா வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 வருடங்களாக நிரந்தர பட்டா இல்லாமல் குடியிருந்து வருகின்றனர். 1977-ல் அப்போதைய தாசில்தார் பட்டா கொடுக்க ஆவணம் செய்தார். ஆனால் கிராமத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அனைவரும் பட்டா பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நிரந்தர பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் நரசிங்கபுரம் கிராமத்தைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முகத்தில் கருப்பு துணி அணிந்து நிரந்தர பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் பட்டா வழங்கக் கோரி கோரிக்கை மனுவை அளித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com