வினாத்தாள் கசிவு புகார்: 3-ந்தேதி நடந்த நீட் தேர்வு ரத்து

நாடு முழுவதும் கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு மீண்டும் நடைபெறும் என்றும், தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் வினாத்தாள் விற்பனை தொடர்பான புகார்களை சிபிஐ விசாரிக்க தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தேர்வு முகமை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணம் எதுவும் கட்ட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஏற்கெனவே கட்டிய தேர்வு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 8-ம்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com