கார் மீது மோதியதால் ஆத்திரம்: பஸ்சை கடத்திய போலீஸ்காரர் கைது

தனது கார் மீது மோதிய ஆத்திரத்தில் தனியார் பஸ்சை கடத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கார் மீது மோதியதால் ஆத்திரம்: பஸ்சை கடத்திய போலீஸ்காரர் கைது
Published on

தேனி,

தேனி மாவட்டம் டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன். இவர், தேனி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கதிரேசன், தனது காரில் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தார். டி.சுப்புலாபுரம் பகுதியில் கார் சென்றபோது பின்னால் மதுரையில் இருந்து கம்பம் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த அழகுராஜா என்பவர் ஓட்டினார்.

பஸ் கடத்தல்

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ், கதிரேசன் காரின் பின்புறம் மோதியது. இதில் காரின் பின்பகுதி சேதமடைந்தது. இதேபோல் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்ததுடன், கண்ணாடி உடைந்தது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய கதிரேசன், விபத்து ஏற்படுத்தியதாக பஸ் டிரைவர் அழகுராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தனது ஊரை சேர்ந்த சிலரை சம்பவ இடத்திற்கு கதிரேசன் வரவழைத்தார்.

பின்னர் அவர்களுடன் சேர்ந்து பஸ் டிரைவரை கதிரேசன் சரமாரியாக தாக்கினார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்ட கதிரேசன், அந்த பஸ்சை தனது ஊரான டி.பொம்மிநாயக்கன்பட்டிக்கு கடத்தி சென்றார்.

கைது

இதுகுறித்து டிரைவர் அழகுராஜா, ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், டி.பொம்மிநாயக்கன்பட்டிக்கு சென்று, கதிரேசனின் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பஸ்சை கைப்பற்றி, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கதிரேசனின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், டி.வி., டேப் ரிக்கார்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com