இன்ஸ்டாகிராமில் பழக்கம்: 2 குழந்தைகளுடன் கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு - கள்ளக்காதலுனுக்கு வலைவீச்சு..!

வேடசந்தூரில் இன்ஸ்டாகிராமில் பழக்கமான கள்ளகாதலனிடமிருந்து இளம்பெண் மற்றும் 2 குழந்தைகளை புனே போலீசார் உதவியுடன் மீட்டனர்.
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: 2 குழந்தைகளுடன் கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு - கள்ளக்காதலுனுக்கு வலைவீச்சு..!
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 27 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்தநிலையில் தனது 2 குழந்தைகளுடன் கடந்த மாதம் வீட்டில் இருந்து அந்த பெண் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே இளம்பெண்ணின் மகள் செல்போன் மூலம் தன் தந்தைக்கு தொடர்பு கொண்டாள். அப்போது அண்ணனையும், தன்னையும் ஒருவர் அடித்து துன்புறுத்தி வருவதாகவும், காப்பாற்றும்படி கூறி கதறி அழுதாள்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமி பேசிய செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இளம்பெண்ணும், 2 குழந்தைகளும் அடைத்து வைக்கப்பட்ட வீட்டு முகவரியை கண்டறிந்தனர்.

பின்னர் போலீசார் மராட்டிய மாநிலம் புனேக்கு விமானம் மூலம் விரைந்து சென்றனர். அங்கு புனே போலீசார் உதவியுடன் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து இளம்பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் மீட்டனர்.

போலீசார் வருவதை அறிந்த கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இளம்பெண் மற்றும் 2 குழந்தைகளை வேடசந்தூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் மற்றும் உறவினரிடம் அவர்களை ஒப்படைத்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com