துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது - மநீம

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது - மநீம
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்தி 30-12-21 அன்று சட்டவிளக்கங்களோடு மக்கள் நீதி மய்யம் விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதலளிக்க மறுத்து தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளார் கவர்னர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு மதிப்பளித்து விரைவில் கவர்னர் இத்திருத்தத்திற்கு ஒப்புதலளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

நியமனமுறை கவர்னர் தேவையில்லை என்றும், குடியரசுத் தலைவரைப்போல தேர்தல் முறையில் கவர்னர் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமென்ற கருத்தாக்கத்தை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் முன்வைத்திருந்ததை நினைவுகூர்கிறோம்."

என்று கூறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com