சேலத்தில் பள்ளப்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்-அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

சேலத்தில் பள்ளப்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் பள்ளப்பட்டி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்-அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
Published on

சேலம்:

சேலம் மாநகராட்சி 25-வது வார்டில் பள்ளப்பட்டி ஏரி உள்ளது. மிகவும் பழமையான ஏரியான இங்கு சுத்தம் செய்து புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் ஏரி அருகே சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அங்கு சென்றனர். தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அப்போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் அல்லது தற்போது உள்ள ஏரிக்கரை பகுதியில் வசிக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் அதை கேட்காமல் ஏரி அருகில் உள்ள வீடு மற்றும் கடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுடன் மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com