

சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை, சென்னை தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையின்போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, மழைநீர் வடிகால்களை தூர்வாரி சீரமைத்தல், நீர்வழித்தடங்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுதல், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் விரைந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைக்காலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவதற்கான மீட்புப் பணிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல், மின்கம்பிகள் மற்றும் மின்சார சாதனங்கள் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனடியாக சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப.. அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.