சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

தேனியில், பெரியகுளம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கின.
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
Published on

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. சாலையோர மழைநீர் வடிகால்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் மழை பெய்தால் மழைநீர் சாலையில் தேங்குகிறது. இதனால், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை தொடர்பாக சாலையோர கடைக்காரர்கள், வீடுகளின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். இதர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பொம்மையகவுண்டன்பட்டியில் நேற்று தொடங்கியது. நகராட்சி ஆணையாளர் கணேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கின.

அளவீடு பணிகள்

அப்போது சாலையோர மழைநீர் வடிகால் பல இடங்களில் தூர்ந்து போய் இருந்தது. அவற்றை தூர்வாரும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த சில நாட்களும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடக்கும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், சாலையின் அகலத்தை அளவீடு செய்யும் பணியில் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அளவீடு செய்து ஆக்கிரமிப்பு பகுதிகள் மற்றும் சாலையின் அகலம் குறித்து ஆங்காங்கே சுவர்களில் குறித்து வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com