பழங்குடியினர் பிரச்சினைகள் குறித்த படைப்புகளுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை

பிறமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் மொழி படைப்பாகவும் இருக்கலாம்.
பழங்குடியினர் பிரச்சினைகள் குறித்த படைப்புகளுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை
Published on

ஊட்டி,

பழங்குடியினர் பிரச்சினைகள் பற்றிய படைப்புகளை வெளியிடும் எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பை வெளியிட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.1 லட்சம் உதவித்தொகை

இதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிடரான 9 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரச்சினைகளை பற்றி எழுதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளர் மற்றும் பழங்குடியினர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுக்கப்படுவர். இதனை ஊக்குவிக்கும் வண்ணம், இவர்களது சிறந்த இலக்கிய படைப்பை வெளியிட தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தமிழ் மொழி படைப்பு

கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகியவை எதுவாகவும், இருக்கலாம். ஆனால் தமிழ் மொழியிலேயே படைப்பு இருக்க வேண்டும். பிறமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் மொழி படைப்பாகவும் இருக்கலாம். எம்.பில்., பி.எச்.டி. போன்ற படிப்புகளுக்கு தயாரிக்கப்படும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு அவை அரிதான சிறப்புடையதாக இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஒரு முறை விருதுக்கு தேர்வு செய்யபட்ட எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்கு பிறகே விண்ணப்பிக்க வேண்டும். படைப்புகளை தேர்ந்தெடுத்தல் குறித்து அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முடிவே இறுதியானது ஆகும்.

நீலகிரி மாவட்டத்தில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்று கொள்ளலாம். அல்லது tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் உரிய படிவத்தில் தவறாமல் செல்போன் எண்ணை குறிப்பிட்டு வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com