கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமல்?

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

சென்னை,

அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக அரசு பதவியேற்று கடந்த 7-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. அன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் முன்னாள் முதல் அமைச்சர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 அன்று இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கக்கூடிய அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும். மேலும் இந்த திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com