கட்டுமான பொருட்களை வாங்கி ரூ.5½ கோடி மோசடி - வெளிநாட்டைச் சேர்ந்தவர் கைது

சென்னை நொளம்பூரில் கட்டுமான பொருட்களை வாங்கி ரூ.5½ கோடி மோசடி செய்த வெளிநாட்டைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கட்டுமான பொருட்களை வாங்கி ரூ.5½ கோடி மோசடி - வெளிநாட்டைச் சேர்ந்தவர் கைது
Published on

சென்னை நொளம்பூரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 45). இவர், சென்னை ஷெனாய் நகரில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம், செம்பரம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த கீம் ஜெஹியோங் (51) என்பவர், தான் அய்யப்பன்தாங்கல் பகுதியில் நடத்தி வரும் நிறுவனத்துக்காக 2018-ம் ஆண்டு ரூ.38 கோடியே 62 லட்சத்து 78 ஆயிரத்து 401-க்கு கட்டுமான பொருட்களை வாங்கினார். அதில் ரூ.33 கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 309-ஐ ரொக்கமாக செலுத்தினார். மீதித்தொகையான ரூ.5 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 92-ஐ கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து தர்மலிங்கம், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த கீம் ஜெஹியோங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com