வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி
Published on

திருத்தணி அடுத்த கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 42). இவரது மகனுக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் வசிக்கும் ரெயில்வே ஊழியரான ராஜேந்திரன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு பிரபுவிடம் ரூ.5 லட்சம் பெற்று கொண்டு ஒப்புதல் பத்திரம் எழுதி கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் கடந்த 4 வருடங்களாக ஆகியும் ராஜேந்திரன் வேலை வாங்கித் தரவில்லை. பிரபு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் இதுகுறித்து புகார் அளித்தார். பின்னர் ராஜேந்திரன் போலி கையெழுத்து இட்டு காசோலை ஒன்றை பிரபுவிடம் அளித்தார். வங்கியில் சென்று காசோலை கொடுத்தபோது அதில் போலியாக கையெழுத்திட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து ராஜேந்திரனிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி ராஜேந்திரன் கோரமங்கலம் பகுதியில் உள்ள பிரபுவின் வீட்டிற்கு சென்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபு திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com