மகளிருக்கு மாவு அரைக்கும் எந்திரம் வாங்க ரூ.5,000 மானியம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்


மகளிருக்கு மாவு அரைக்கும் எந்திரம் வாங்க ரூ.5,000 மானியம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
x

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிர் மாவு அரைக்கும் எந்திரம் வாங்க விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025-2026-ம் நிதியாண்டிற்காக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான எந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கத் தேவையான சான்றுகள்:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்க்கண்ட சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று), வயது வரம்பு- 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும், பிறந்த தேதிக்கான சான்று, திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்).

எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் மேற்சொன்ன ஆவண நகல்களுடன் தங்களது விண்ணப்பங்கள் 14.7.2025-க்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி தொடர்பு எண்.0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story