சென்னை பாரிமுனையில் போலீஸ் வாகன சோதனையில் செல்போன் வியாபாரியிடம் ரூ.70 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா? என விசாரணை

சென்னை பாரிமுனையில் போலீஸ் வாகன சோதனையில் செல்போன் வியாபாரியிடம் ரூ.70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.
சென்னை பாரிமுனையில் போலீஸ் வாகன சோதனையில் செல்போன் வியாபாரியிடம் ரூ.70 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா? என விசாரணை
Published on

ரூ.70 லட்சம்

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கையில் பையுடன் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.70 லட்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

செல்போன் வியாபாரி

இதையடுத்து அவரை வடக்கு கடற்கரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர், சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சஹாபுதின் (வயது 57) என்பதும், பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் இருந்த ரூ.70 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஹவாலா பணமா?

அந்த பணம் எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது?. அது ஹவாலா பணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.70 லட்சத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com