காவிரி உப வடிநிலத்தை புனரமைக்க ரூ.224 கோடி நிதி அனுமதி - தமிழக அரசு உத்தரவு

காவிரி உப வடிநிலத்தை புனரமைக்க ரூ.224 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி உப வடிநிலத்தை புனரமைக்க ரூ.224 கோடி நிதி அனுமதி - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

காவிரி ஆற்றுப்பாசன வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ், காவிரி உப வடிநிலத்தைப் புனரமைத்து நவீனப்படுத்துவதற்கு ரூ.224 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

காவிரி உப வடிநில விரிவாக்கப் பணிகள், புனரமைப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்காக நபார்டு கட்டமைப்பு மேம்பாட்டு உதவி அமைப்பான என்.ஐ.டி.ஏ.விடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 384 கோடி தொகையை தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் புனரமைப்புக் கழகம் பெற்றுக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இப்பணிகளுக்காக 90 சதவீதம் தொகையை நபார்டும், 10 சதவீதம் தொகையை மாநில அரசும் அளிக்கும். அதன்படி, காவிரி உப வடிநிலத்தை மேம்படுத்த 23 தொகுப்புகளாக திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. பின்னர் 33 திட்டப்பணிகள் தயாரிக்கப்பட்டன.

இதில், விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் 2 தொகுப்பு பணிகளுக்காக ரூ.243 கோடியே 40 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கும்படி அரசுக்கு தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் புனரமைப்புக் கழகத்தின் மேலாண் இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார்.

அதை தமிழக அரசு ஏற்று, முதல் தொகுப்பில், தஞ்சை மாவட்டம் புதலூர் தாலுகாவில் உள்ள காவிரி உப வடிநில பகுதியில் காவிரி நதிநீர் பாசன கட்டமைப்பை விரிவாக்கம் செய்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணிகளுக்காக ரூ.122 கோடியே 60 லட்சம், புதலூர் மற்றும் திருவையாறு தாலுகாக்களில் அதுபோன்ற பணிகளுக்காக ரூ.102 கோடியே 20 லட்சம் என ரூ.224 கோடியே 80 லட்சம் தொகைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர, திட்டம் தொடர்பான 33 தொகுப்புகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com