பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.59.73 லட்சம் பறிமுதல்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் பறக்கும் படை சோதனையில் பறிமுதல் செய்த பணம் தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களிடம் ரூ.55.55 லட்சம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.59.73 லட்சம் பறிமுதல்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி,

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்டு வரும் தீவிர சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.59 லட்சத்து 73 ஆயிரத்து 810 ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 392 மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.6 லட்சத்து 62 ஆயிரத்து 600 மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில் ரூ.55 லட்சத்து 55 ஆயிரத்து 970 ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கத்தைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com